Tuesday, June 30, 2009

சத்தியாக்ரகம்

சமீபத்தில், ஒரு நண்பர் கணவரோடு எப்படி குடும்பம் நடத்துவது என்று ஒரு blog ல் வந்திருந்த குறிப்புகளை அனுப்பி இருந்தார். அதில் மூஞ்சியை தூக்கி வைத்திருப்பதை பற்றியும் வந்திருந்தது. அதை படிக்கும் பொழுது வேடிக்கையாக இருந்தது.

நான் உறவுகள் என்ற பதிவில் எழுதியிருந்த பிரகாரம், நாம் எதிர்பார்த்த அளவு நமது உறவினர் நமக்கு செய்யவில்லை என்றால், நாம் நமது அதிருப்தியை, வருத்தத்தை, எதிர்ப்பை பல வழிகளில் காண்பிக்கிறோம். அவற்றில் சில: நேரடியாக சண்டை போடுவது, மறைமுகமாக குத்திக்காண்பிப்பது, பாத்திரங்களை, கதவுகளை சத்தம் ஏற்படும் படி கையாள்வது, அந்த உறவினருக்கு பிடிக்காததை வேண்டும் என்றே செய்வது, அடுத்தவர்களிடம் அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவது, சாப்பிடாமல் இருப்பது, நமக்கு பிடித்தமானதை செய்யாமல் இருப்பது இவை எல்லாவற்றிற்கும் மேலாக பேசாமல் இருப்பது. இந்த பேசாமல் இருப்பதைத்தான் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வது என்று சொல்கிறோம்.

இந்தமாதிரியான ஆயுதத்தை வைத்துத்தான் நமது பெரியவர் மோகன்தாஸ் காந்தி நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார். அதாவது வன்மையைவிட, மனிதருக்குள் இருக்கும் மென்மையை காயப்படுத்துவது தான் சத்தியாக்கிரகம். கத்தியின்றி, ரெத்தமின்றி அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், இதுவும் ஒருவவையில் ஹிம்சை தான்.

மற்றவர்களை நம் வழிக்கு கொண்டுவருவதற்கு நாம் ஏதோ ஒரு வகையில் அடுத்தவரை பாதிப்புக்கு உள்ளாக்கினால் தான் அதை சாதிக்க முடியும். இல்லாவிட்டால், அந்த நபர் நான் அப்படித்தான் செய்வேன், நீ யார் கேட்பதற்கு என்ற ரீதியில் தான் நடந்து கொள்வார். குழந்தை அழுது அடம்பிடிப்பது கூட அந்த வகைதான். குழந்தை அழுது அடம்பிடிக்கும் பொழுது நமது மனம் இளகிவிடுகிறது, எவ்வளவு நேரம் தான் அழவிடுவது. அதுக்கு அது கேட்பதை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று நாம் முடிவுக்கு வருகிறோம். அதாவது அந்த குழந்தை அழுவது நமக்கு வலிக்கிறது. ஆக, எப்படியும் அடுத்தவர்களை காயப்படுத்தாமல் நாம் ஜெயிக்க முடியாது.

உறவுகளுக்கு இடையில் நாம் மாறி மாறி ஒவ்வொருத்தரையும் நமது வழிக்கு கொண்டுவர அவர்களை வளைப்பதற்கு நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். வயதானால் கூட நமது குழந்தைகளோ அல்லது பேரக்குழந்தைகளோ நாம் எதிர்பார்ப்பதை செய்யவில்லை என்றால், அவர்களுக்கும் நமது எதிர்ப்பை தெரிவிக்க வயது வித்தியாசம் இல்லாமல், இந்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொள்கிறோம். இது வன்முறையான ஆயுதமாக இல்லாததால், எந்த வயதிலும் இது தப்பாக யாருக்கும் தெரிவதில்லை. அது மட்டுமில்லாமல், இந்த மாதிரியான சத்தியாக்கிரக ஆயுதத்தில், நம்மை நாமே காயப்படுத்திக்கொள்கிறோம். ஆகவே, இது தப்பாக தெரியாமல் இருப்பது மட்டுமல்ல, இது எல்லோருக்கும் நல்லதாகவும் தெரிகிறது, ஏனென்றால் “நான் என்ன உங்களையா காயப்படுத்துகிறேன், என்னை நானே வருத்திக்கொள்கிறேன்.” என்று நாம் சொல்வதால்.

இப்படி வன்முறையான ஆயுதமோ அல்லது மென்முறையான சத்தியாக்கிரகம் போன்ற ஆயுதமானாலும் சரி அதை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. இருந்தாலும் அதை யாரும் கேட்கப்போவது இல்லை. ஆகவே, அப்படி மென்மையான ஆயுதங்களை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது இரண்டு தரப்புக்கும் அதிகப்படியான இழப்புகள் ஏற்படாமல் எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

அப்படியாக சத்தியாக்கிரக ஆயுதத்தை பிரயோகிக்க விரும்புவர்கள், எந்த ஆயுதத்தை எப்பொழுது யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து உபயோகிக்க வேண்டும். சகட்டு மேனிக்கு எல்லோரும் எப்பொழுதும் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வது என்ற ஆயுதத்தை பயன்படுத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் என்ன ஆகிறது, ஒரு புறம், நமது ஆயுதத்துக்கு மதிப்பில்லையே என்ற ஆத்திரமும், அந்த உறவினரை வளைக்க முடியவில்லையே என்ற ஆத்திரமும், சேர்ந்து நமக்குத்தான் இன்னும் கோபம் அதிகம் வரச்செய்யும். இன்னொருபுறம், அந்த உறவினருக்கு நம்மைப்பற்றி ஒரு கேவலாமான எண்ணம் வரும், ஆமாம், இவர் எதற்கு எடுத்தாலும் சும்மா சும்மா மூஞ்சியை தூக்கிவைத்துக்கொள்வார் அல்லது எப்பொழுதுமே அழுதுகொண்டிருப்பார் என்று.

அதே நேரத்தில் இது மென்மையை தாக்குவது என்பதால், எந்த மென்மையான பகுதி ஒருவருக்கு பாதிப்பை உண்டு பண்ணும் என்பதை தேர்ந்து எடுத்து அதற்கு எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்பதை யோசித்து பயன்படுத்தவேண்டும். கர்ணனை தோற்கடிக்க அவனது கொடை கொடுத்தல் என்ற மென்மையை பயன் படுத்தி, அர்ச்சுனனின் தந்தை இந்திரன், தாய் குந்தி மற்றும் கண்ணன் எல்லோரும் வீழ்த்தினார்கள். அதே மாதிரி மாதம் இரண்டு மூன்று முறை உண்ணாமல் இருக்கும் ஒருவரிடம் உண்ணாமல் இருந்து காரியம் சாதிக்க முடியாது. நானும் தான் உண்ணாமல் பல நாள் இருக்கிறேன், இதில் என்ன பிரச்சனை என்று அந்த ஆயுதத்துக்கு மதிப்பில்லாமல் செய்துவிடுவார்கள்.

எல்லா ஆயுதத்தையும் எல்லோரும் கையால முடியாது. அப்படி கையாலும் பொழுது அதில் ஒரு நேர்த்தி வேண்டும். அப்படியான நேர்த்தி இல்லாததால் பல நேரங்களில் அது உதவுவதில்லை. பல கோடி பெருமானமுள்ள ஆயுதம் எதிரி இலக்கை சரியாக அடிக்காமல் பள்ளிக்கூடத்தில் விழுந்தால் எப்படி நமக்கும் நஷ்டமாகி, எதிரி பக்கமும் தேவையில்லாத நாசத்தை உண்டுபண்ணுமோ அதுபோல், மென் ஆயுதத்தையும் சரியாக கையாளவில்லை என்றால் இரு பக்கமும் தேவையில்லாத நஷ்டங்கள் தான் மிஞ்சும். உதாரணமாக, இன்று உண்ணாவிரதம் என்பது கேளிக்கூத்தாகி நடத்துபவர்களுக்கும் நஷ்டம், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் என்றாகிவிட்டது.

பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் இருந்தால் யாரும் யாரையும் வளைக்க வேண்டியதில்லை. நாமும் சுதந்திரமாக வாழ்ந்து பிறரையும் சுதந்திரமாக வாழ விடுவதே இந்த குறுகிய கால வாழ்க்கைக்கு நல்லது. ஆகவே, வன்மை, மென்மை இரண்டு ஆயுதங்களையும் எடுக்காமல் வாழ பழகுவோம்.

No comments:

Post a Comment