காக்கையும் புறாவும் ஒரே மாதிரியான உடலமைப்பு கொண்டவையாக இருந்தாலும், புறா நம்மை வசீகரிப்பது போல், காக்கை நம்மை வசீகரிப்பதில்லை. இது காக்கையின் குற்றமும் அல்ல, புறாவின் பெருமையும் அல்ல. நம்முள்ளே இருக்கும் ஏதோவொன்று சில விஷயங்களை மட்டும் வசீகரத்தன்மை கொண்டதாக உணர்கிறது. எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சில பாடல்கள் நம்மை சொக்கவைத்துவிடும். அந்த வசீகரத்தன்மை பாட்டில் இல்லை, அந்த வசீகரத்தை பகுத்தறிந்து உணரும் தன்மை நம்மிடம் தான் இருக்கிறது.
சிலருடைய எழுத்து நம்மை வசீகரிக்கும் – கல்கி, சுஜாதா போல
சிலருடைய பேச்சு நம்மை வசீகரிக்கும் – கலைஞர், ஹிட்லர், சில சாமியார்கள் போல
சிலருடைய நடனம் நம்மை வசீகரிக்கும் – மைக்கேல் ஜாக்சன் போல
சிலருடைய நடை உடை பாவனை நம்மை வசீகரிக்கும் – ரஜினி, ஜேம்ஸ்பாண்ட் போல
ஆனால், இது எல்லாம் இந்த கலைஞர்களின் அல்லது தலைவர்களின் திறமையால் அல்ல. அவர்களுடைய செயல்கள் நம்முள் ஒளிந்துள்ள வசீகரத்தை உணரும் தன்மையோடு ஒத்துப்போவதால் தான்.
சிலருடைய முக அமைப்போ அல்லது உடலோ நேர்த்தியாக எந்த குறையும் இல்லாமல் இருந்தும், நம்மை வசீகரிக்கமாட்டா. அதே போல் தான் மேலே சொன்னவர்களைவிட திறமையான நபர்கள் இருந்தால்கூட நமக்குள் உள்ள வசீகரத்தை உணரும் தன்மையோடு அவை ஒத்துப்போகவில்லை என்றால், அவைகள் நம்மை கவரமாட்டா.
ஆக, பூட்டுக்கு பொருத்தமான சாவி போல. நம்முடைய உணரும் தன்மைக்கு பொருத்தமானவையாக அந்த சாவிகள் இருந்தால் தான் அது வசீகரமாக ஆகும். ஆக பூட்டு இல்லை என்றால் சாவி இல்லை. ஆனால், நாம் சாவியை ஒரு பெருமைக்குரிய விஷயமாக, திறமையானதாக, சிறந்ததாக, உயரியதாக இருக்கிறது என்று அவைகளை தலையில் தூக்கி celebrity அல்லது பிரபலமானவர்கள் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அதன் பின்னனியில் இருப்பது நமது பூட்டுத்தான். புறாவிற்கு தெரியாது நாம் மனிதனின் கண்ணிற்கு காக்கையைவிட அழகாக தெரிகிறோம் என்று. அது தெரிந்தால் அதன் பெருமைக்கு எப்படி அது காரணம் இல்லியோ அது போல்தான் மற்றவர்களின் வசீகரத்தன்மையும் அதன் சார்ந்த பெருமையும்.
எங்கெல்லாம் நம் “வசீகரத்தை உணரும் தன்மை” இருக்கிறது என்று கண்டுபிடித்து அவைகளை காசாக்குவது தான் நமது மீடியாக்களின் வேலை.
அப்படி பேச்சில் வசீகரத்தை உண்டுபண்ணுக்கூடியவர்கள் அரசியலையும் ஆன்மீகத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
No comments:
Post a Comment