Saturday, August 28, 2010

அபேதம்

எல்லா பேத எண்ணமும் வெற்றி முணைப்பும்,

நமது சிறுமையையே பறைசாற்றுகிறது.

நாம் மற்றவர்களைவிட சிறுமையாக எண்ணுமட்டும்,

நாம் சிறுமைப்பட்டிருக்கவில்லை என்பதை நிறுபிப்பதற்காகத்தான்

நமது எல்லா வெற்றி முகாந்திரங்களும்.

சமமாக எண்ணுமட்டும், அபேதம் மிஞ்சும்,

அபேத நிலையே அமைதி,

அதே சாந்தம்,

அதே பேராணந்தம்.



(பேத எண்ணம் என்பது எண்ணிலடங்கா - நாடு என்பது பேதம், ஆண் பெண் பால் என்பது பேதம்; எல்லா ஏற்ற தாழ்வான எண்ணங்கள் பேதம்; மொழிப்பற்று, மதப்பற்று, ஜாதியப்பற்றுக்கள் பேதத்தின் குழந்தைகள்; Rank, award, medal, etc என்பவைகள் பேதத்தின் உச்சங்கள்; நம்மிடம் மற்றும் பிறரிடம் காணும் குறைகள் பேதத்தன்மையால் தான்; மாண்புமிகு, மேதகு, மதிப்புக்குறிய என்பவை அபேதத்தின் வெடிகுண்டுகள், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்)

Monday, March 15, 2010

வசீகரம்

காக்கையும் புறாவும் ஒரே மாதிரியான உடலமைப்பு கொண்டவையாக இருந்தாலும், புறா நம்மை வசீகரிப்பது போல், காக்கை நம்மை வசீகரிப்பதில்லை. இது காக்கையின் குற்றமும் அல்ல, புறாவின் பெருமையும் அல்ல. நம்முள்ளே இருக்கும் ஏதோவொன்று சில விஷயங்களை மட்டும் வசீகரத்தன்மை கொண்டதாக உணர்கிறது. எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சில பாடல்கள் நம்மை சொக்கவைத்துவிடும். அந்த வசீகரத்தன்மை பாட்டில் இல்லை, அந்த வசீகரத்தை பகுத்தறிந்து உணரும் தன்மை நம்மிடம் தான் இருக்கிறது.

சிலருடைய எழுத்து நம்மை வசீகரிக்கும் – கல்கி, சுஜாதா போல

சிலருடைய பேச்சு நம்மை வசீகரிக்கும் – கலைஞர், ஹிட்லர், சில சாமியார்கள் போல

சிலருடைய நடனம் நம்மை வசீகரிக்கும் – மைக்கேல் ஜாக்சன் போல

சிலருடைய நடை உடை பாவனை நம்மை வசீகரிக்கும் – ரஜினி, ஜேம்ஸ்பாண்ட் போல

ஆனால், இது எல்லாம் இந்த கலைஞர்களின் அல்லது தலைவர்களின் திறமையால் அல்ல. அவர்களுடைய செயல்கள் நம்முள் ஒளிந்துள்ள வசீகரத்தை உணரும் தன்மையோடு ஒத்துப்போவதால் தான்.

சிலருடைய முக அமைப்போ அல்லது உடலோ நேர்த்தியாக எந்த குறையும் இல்லாமல் இருந்தும், நம்மை வசீகரிக்கமாட்டா. அதே போல் தான் மேலே சொன்னவர்களைவிட திறமையான நபர்கள் இருந்தால்கூட நமக்குள் உள்ள வசீகரத்தை உணரும் தன்மையோடு அவை ஒத்துப்போகவில்லை என்றால், அவைகள் நம்மை கவரமாட்டா.

ஆக, பூட்டுக்கு பொருத்தமான சாவி போல. நம்முடைய உணரும் தன்மைக்கு பொருத்தமானவையாக அந்த சாவிகள் இருந்தால் தான் அது வசீகரமாக ஆகும். ஆக பூட்டு இல்லை என்றால் சாவி இல்லை. ஆனால், நாம் சாவியை ஒரு பெருமைக்குரிய விஷயமாக, திறமையானதாக, சிறந்ததாக, உயரியதாக இருக்கிறது என்று அவைகளை தலையில் தூக்கி celebrity அல்லது பிரபலமானவர்கள் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அதன் பின்னனியில் இருப்பது நமது பூட்டுத்தான். புறாவிற்கு தெரியாது நாம் மனிதனின் கண்ணிற்கு காக்கையைவிட அழகாக தெரிகிறோம் என்று. அது தெரிந்தால் அதன் பெருமைக்கு எப்படி அது காரணம் இல்லியோ அது போல்தான் மற்றவர்களின் வசீகரத்தன்மையும் அதன் சார்ந்த பெருமையும்.

எங்கெல்லாம் நம் “வசீகரத்தை உணரும் தன்மை” இருக்கிறது என்று கண்டுபிடித்து அவைகளை காசாக்குவது தான் நமது மீடியாக்களின் வேலை.

அப்படி பேச்சில் வசீகரத்தை உண்டுபண்ணுக்கூடியவர்கள் அரசியலையும் ஆன்மீகத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

Saturday, March 6, 2010

வலியும் பயமும்

வலிக்கு நமது வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு இருக்கிறது.

ஒரு நதியின் பாதையை நிர்ணயிக்கும் கரை போல் தான் நமது வாழ்க்கையின் போக்கை மாற்றியமைக்கக்கூடியவை இந்த வலிகள். உடலால் ஏற்படும் வலிகள், நமது செயல்களை வரையறுக்கின்றன. மன வலிகள் சமுதாயத்தில் நமது நடைமுறைகளை வரையறுக்கின்றன. வலியில் இருந்து பிறப்பது தான் பயம். இந்த பயம் தான் கரைகளை வழுவாக்குகின்றன. வலியை விட இந்த பயம் உறுதியானது. வலி சிறியதாக இருக்கலாம், ஆனால், அந்த வலியால் உண்டான பயம், அந்த வலியின் தன்மையை மிகைப்படுத்திக்கொள்ளும். அப்படி மிகைப்படுத்தி கற்பனை செய்துகொள்வதால், பயம் அந்த உண்மையான வலியை விட பன்மடங்கு பெரியதாக இருக்கிறது. அப்படி அதன் பரிமாணம் உண்மையைவிட அதிகமாக இருப்பதால், அந்த பயத்தின் உறுதித்தன்மை வலியின் உறுதித்தன்மையைவிட பன்மடங்கு அதிகமானது. அதனால் நமது கண்ணுக்கு பயம் பெரிதாக தெரிகிறது.

இந்த வலி உடலுக்கு ஏற்பட்டால் ஹிம்சை வலி. அது மனதுக்கு ஏற்பட்டால், சத்தியாகிர பதிவில் எழுதியிருந்த பிரகாரம் அவை அஹிம்சை வலியாகும். ஆக வலி வலிதான், முறை எப்படி இருந்தாலும்.

ஒருவன் காட்டுவழியில் செல்லும் பொழுது முள் குத்திவிட்டது என்றால், அந்த பகுதியில் அவன் மீண்டும் செல்லமாட்டான், அல்லது தவிர்க்கமுடியாமல் செல்ல நேரும் பொழுது மிகுந்த பயத்தோடு எச்சரிக்கையோடு செல்வான். ஆக, அந்த வலி பயத்தை உண்டுபண்ணி நமது செயல்பாட்டை வரையறுக்குறது. வெண்டைக்காய் சாம்பார் வைத்தால் கணவருக்கு பிடிக்காது அவர் திட்டுவார் என்ற பயத்தினால், அந்த மனைவி வெண்டைக்காய் சாம்பாரே வைக்க மாட்டார். நண்பர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தால் மனைவி முகத்தை தூக்கி வைத்துக்கொள்வாள் என்ற பயத்தில் நண்பர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவதை தவிப்பார் அந்த கணவர்.

இதே போல் தான், ஒரு நாட்டின் எழுதப்பட்ட சட்ட திட்டங்களும், சமுதாயத்தின் எழுதப்படாத சட்டதிட்டங்களும், நமது அன்றாட செயல்பாட்டை வரையறுக்கின்றன. அந்த சட்டதிட்டங்கள் தரும் வலியும் அவற்றால் உண்டான பயமுமே அதற்கு ஆதாரம். இந்த பயமே அனைத்து செயல்களுக்கும் உந்து சக்தி. வலி என்பது அக்னி, அந்த அக்னியில் இருந்து உதித்த ஜுவாலையே இந்த பயம், அதுவே அனைத்து செயல்களுக்கும் ஆதாரம்.

ஒரு வலி, பயம் மூலமாக தவிக்கப்படும்வரை, அந்த பயம் ஒரு வேலியாக ஒரு கரையாக, ஒரு எல்லையாக இருக்கும், எப்பொழுது அது தவிர்க்கபட முடியாமல் அனுபவிக்க வேண்டிய வலியாகும் நிலைவருமோ அப்பொழுது, அது வெடித்து சிதற ஆரம்பித்துவிடும். அப்பொழுது அது புரட்சியாகவோ, அல்லது வெறியாகவோ உருவாகி, நல்லது கெட்டது என்ற இரண்டையும் உண்டாக்க கூடிய வல்லமை படைத்ததாகிறது.

ஒரு நாட்டின் நிர்வாகம் செயல்பட பயம் வேண்டும், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு திறம்பட இருக்க பயம் வேண்டும். ஆக, எந்த ஒரு ஆளுமைக்கும் பயம் ஆதாரம். ஆக அன்றாட வாழ்வில், எல்லோரும் ஒருவரை ஒருவர் ஆளுமை செய்ய முயன்று கொண்டே இருக்கிறோம். அப்படி முயலும் பொழுது யார் அதிகமாக பயத்தை உருவாக்குகிறார்களோ அவர்களே ஆளுமை செய்யக்கூடியவர்களாக ஆகிறார்கள்.

இந்த பயத்தின் அளவும் வலியின் அளவும் அவர் அவர் வலிதாங்கும் திறனைப்பொருத்தது, ஒரு சின்ன ஊசியின் வலியை பெரியதாக கருதுபவர்களும் உண்டு, கடப்பாரை குத்தினாலும், தூக்கிப்போட்டுவிட்டு நடந்து செல்பவர்களும் உண்டு. இதுவே ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுகோல். ஆளுமை செய்பவர்கள், அதிக வலிதாங்குபவர்களாக இருப்பார்கள். குறைந்த வலிதாங்குபவர்கள், பயத்தில் ஆளுமைக்கு உட்படுவதே மேல் என்று, அடிமைபட்டு போய்விடுகிறார்கள்.

இதுவே ஆணாதிக்கத்தின் அஸ்திவாரம். ஆண்கள் உடல் மற்றும் உழைப்பில் பெண்களைவிட அதிக வல்லமையும், அதிக வலிதாங்கும் திறனுடனும் இருப்பதால், பெண்களுக்கு அதிக வலியை கொடுத்து அதன் மூலம் பயத்தை உண்டுபண்ணி அவர்களை ஆளுமை செய்து வந்துள்ளனர். அதே போல் மகனை ஆளுமை செய்யும் திறன் கொண்ட பெண்கள், மருமகளை ஆளுமை செய்யக்கூடியவர்களாக ஆயினர். கணவரை ஆளுமை செய்யும் திறன் கொண்ட பெண்கள், மாமி்யார்களை ஆளுமை செய்யக்கூடியவர்களாக ஆயினர்.

ஆக ஆளுமை செய்ய விரும்புவர்கள் அல்லது அடிமைப்பட விரும்பாதவர்கள், வலி தாங்குபவர்களாக அல்லது வலியை மற்றவர்களுக்கு கொடுப்பவர்களா இருக்கிறார்கள்.

Friday, February 19, 2010

நான், எனது, எனக்கு, என்னுடைய, என்னால்

முன்பு ஒருமுறை ஒரு குரூப் forum ல் ஒரு நண்பர் எழுதிய போஸ்ட்டுக்கு இன்னொரு நணபர் பின்வருமாறு கேள்விகள் கேட்டிருந்தார்.

"மனத்தூய்மையா இருக்க முடியுமா? மனத்தூய்மைன்னா புறம் பேசாம யார் மனதையும் துன்புறுத்தாம துரோகிக்காம ஏமாத்தாம பொய் சொல்லாம வன்முறை செயல்கள் செய்யாம கடும் சொல் சொல்லாம முடிந்தவரை தான தர்மம் செய்துக்கொண்டு இனிமையான சொற்களுடன் கருணை பொழியும் கண்களுடன் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாம அனைவரையும் அணைத்து செல்லும் பாங்கா?

இப்படி எல்லாம் இருக்க முடிவது சாத்தியமா? அது தான் முதலில் விஷமாக இருந்து முடிவில் அமிருதமாக உணரும் சாத்வீகமா?

ஆத்ம தரிசனம்னா என்ன? நேரா சாமிய கோவிலுக்கு போய் கும்பிடாம மனதில் இறைவனை நினைத்து அவன் நாமம் ஜபிப்பதா?" ...என்று கேட்டிருந்தார்.

அதற்கு நான் பின்வருமாறு பதில் கூறியிருந்தேன்.

"அந்த குறிப்பிட்ட சுலோகத்தின் அர்த்தம் "ஆத்ம தரிசனத்தால் உண்டாகும் மனத்தெளிவினால் ஏற்படும் சுகம் சாத்வீகமான சுகம், அதை அடைவது விஷம் சாப்பிடுவது போல் கடினமானது ஆனால் இறுதியில் அது அமிருதம் போல் இருக்கும்."

ஆத்ம தரிசனம் என்பது சாமியை கும்பிடுவதோ இறைவனை நினைப்பதோ அல்ல. நம் உடலில் இருப்பது இரண்டு, ஒன்று ஜட மயமான உடம்பு, இரண்டாவது ஆன்மா. ஆத்மாதான் நமக்கு உயிரையும் கொடுத்து, நமது உடல் இயங்கவும் காரணமாக இருக்கிறது. வெறும் உடல் பஞ்சபூதங்களால் ஆன பிணம். அது ஒரு வாகனம் மட்டுமே. இந்த ஆன்மா, உடல் என்ற இரண்டு மட்டுமே உண்மை. இந்த இரண்டுக்கும் நடுவில் "நான்" என்ற எண்ணம் மனத்தின் துணையோடு வந்து உட்காந்து கொள்கிறது. நாம் தூங்கும் பொழுது இந்த "நான்" இல்லை, நாம் மயக்கத்தில் இருக்கும் பொழுது இந்த "நான்" இல்லை. நாம் உயிரோடு இருக்கும் வரை நம்மோடு எந்த நேரமும் இருப்பது ஆன்மா ஒன்றே.

"நான்" என்ற எண்ணம் இந்த ஆன்மாவின் உண்மையை மறைத்துவிடுகிறது. நம்முடைய செயல், சிந்தனை, அறிவு என்ற எல்லாவற்றிற்கும் பின் புலமாக இருப்பது இந்த ஆன்மா ஒன்றே. ஆனால், இந்த இடையில் தோன்றிய "நான்" என்ற கற்பனையான எண்ணம், இது எல்லாவற்றிற்கும் உரிமை கொண்டாடுகிறது.

சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கிறார் என்றால், அப்படி நடிக்கும் நேரங்களில், அவர் கட்டபொம்மன் என்ற கதாபாத்திரமாகவே வலம் வருவார். அப்பொழுது சிவாஜி என்ற எண்ணம் இருக்காது. சிம்மாசானத்தில் உட்கார்ந்து கொண்டு "என் குலப்பெண்களுக்கு மஞ்சள் அறைத்துக்கொடுத்தாயா" என்று தான் கேட்பார், அப்பொழுது சிம்மாசானத்தில் இருந்து கொண்டு தாயாரிப்பாளரிடம் சம்பளம் பற்றி பேசமாட்டார். இங்கு உண்மையில் கட்டபொம்மன் இல்லை, ஆனாலும் சிவாஜி தன்னை கட்டபொம்மனாகவே நினைத்துக்கொள்வார். ஆனால், படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் சிவாஜியாக வலம் வருவார். இல்லியா? ஆனால், படப்பிடிப்பு முடிந்த பின்பும் தான் சிவாஜி என்பதை மறந்துவிட்டு கட்டபொம்மனாகவே வலம் வந்தால் எப்படி இருக்குமோ, அது மாதிரி நாம் எல்லோரும் சிவாஜி மாதிரியான ஆன்மாவை மறந்துவிட்டு, கட்டபொம்மன் மாதிரி இருக்கும் ஒரு கற்பனை பாத்திரமான "நான்" என்ற எண்ணத்தை கைக்கொண்டு இந்த உலகில் திரிந்து கொண்டு இருக்கிறோம்.

எப்பொழுது நான் கட்டபொம்மன் என்ற எண்ணத்தை கை விட்டவுடன், தான் சிவாஜி என்ற நிலைக்கு வருவாரோ, அதே மாதிரி எப்பொழுது நாம், "நான்" என்ற எண்ணத்தை கை விடுகிறோமோ, அப்பொழுது ஆன்மாவை மறைத்துக்கொண்டு இருக்கும் திரை விழகிவிடும். அப்பொழுது நமக்கு தெரிவது அந்த பரஞ்ஜோதியான ஆன்மா ஒன்றே. அந்த தரிசனமே ஆன்ம தரிசனம்.

நீங்கள் கேட்டிருந்த மனத்தெளிவு அல்லது மனத்தூய்மை என்றால், இந்த நான் என்ற எண்ணம் இல்லாதிருப்பதே. எல்லா கெட்ட நடத்தைக்கும் இந்த நான் என்ற எண்ணமே மூலம். நான், என்னுடையது, எனக்கு, என்னால் என்ற தன்னிலை இல்லாமால் நம்மால் பேசக்கூடமுடியாது. அப்படிப்பட்ட "நான்" என்ற ஒரு எண்ணம் இல்லாத நிலையில் ஏற்படும் ஆத்ம தரிசனத்தை அடையத்தான் எல்லா ஆன்மீக முறைகளும் பல வழிகளைப் போட்டுக்கொடுத்துள்ளன."

இப்படி நான் எழுதியதற்கு அந்த நண்பர் கீழ்வருமாறு பதில் எழுதியிருந்தார்.


"நான் எனது எனக்கு என்பதை உதாரணத்தோட விளக்கியதும் கேட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில்கள் கொடுத்ததும் மிகவும் மனதை நிதானமாக்கியது... படித்து தெளிந்தேன்..(எங்கயும் நான் எனக்குன்னு சொல்லாம எழுதிட்டேன்)".

இப்படி அவர் வேடிக்கையாக எழுதியிருந்தாலும், நமக்கு தெரியும் இந்த வாக்கியத்தில் என் மனதை, நான் படித்து தெளிந்தேன், நான் எழுதிவிட்டேன் என்று என், நான் என்பது மறைந்திருக்கிறது என்று.

"போ" என்று சொன்னால், அங்கே "உன்னை நான் உத்தரவிடுகிறேன் இங்கிருந்து நீ போய்விடு" என்பதில் "போ" தவிர மற்றவை எல்லாம் மறைந்திருக்கிறது இல்லியா. அதே போல் தான் நமது செயல், பேச்சு, எழுத்து, எண்ணம் எல்லாவற்றிலும் நான், எனது, என்ற அகங்காரம் நிறைந்திருக்கும்.

ஆக, இந்த அகங்கார வார்த்தைகள் இல்லாமல் நம்மால், பேச எழுத, சிந்திக்க, செயல்பட முடியாது.

நான் என்னதான் மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று செய்தாலும், நல்வழி படுத்துகிறேன் என்று எழுதினாலும், மனம் சாந்தியுற பேசுகிறேன் என்றாலும் அங்கு ஒவ்வொரு செயலிலும் அகங்காரம் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆக, எதுவும் செய்யாமல் இருப்பதே நான் மற்றவர்களுக்கு செய்யும் நல்ல காரியம்.

Tuesday, February 16, 2010

எந்த காலத்தில் வாழ்வது

பொதுவாக எல்லோரும் சொல்வார்கள்...

"இறந்தகாலம் இல்லாது இறந்து போயிற்று, அதை நினைத்து பிரயோஜனம் ஒன்றுமில்லை
வரும்காலம் என்ன என்பதே தெரியாது, அதை நினைப்பதும் பிரயோஜனம் ஒன்றுமில்லை
ஆக நிகழ்காலமான இந்த நொடியை ஆழ்ந்து அனுபவிப்பதே சிறந்தது, அதனாலேயே நிகழ்காலம் present என்று சொல்லப்படுகிறது. நிகழ்காலமும், அதன் அனுபவமும் கிடைத்தற்கு அறிதான பொக்கிஷம்" என்று.

ஆனால், காலத்தை மேலும் ஆயும் போழுது...

நிகழ்காலம் என்பதை கால அளவுகளில் பார்க்கும் பொழுது, எதை நிகழ்காலம் என்பது, ஒரு நாளையா, ஒரு மணியையா, ஒரு நிமிடத்தையா, ஒரு வினாடியையா... இல்லை அதை இன்னும் கூர்ந்து நோக்கும் பொழுது ஒரு வினாடியின் 1/1000000000000+ என்ற மிக மிக நுண்ணிய காலத்துளியே நிகழ்காலம். ஒரு வினாடியின் 1/1000000000000+ என்ற கால அளவு முடிந்து அடுத்த 1/1000000000000+ கால அளவு வரும்போழுது முந்தைய 1/1000000000000+ கால அளவு இறந்தகாலமாகிப்போய்விடுகிறது.

ஆக, நாம் உண்மையில் வாழ்வது மிக மிக நுண்ணிய காலத்துளியே, மற்றவையெல்லாம், இறந்தகால சிந்தனையிலும் எதிர்கால எதிர்பார்ப்பிலும் தான். இன்னும் சொல்லப்போனால், இந்த நுண்ணிய கால அளவை வைத்து பார்க்கும் பொழுது, நிகழ்காலம் என்பது இல்லாமலே போய்விடுகிறது.

நிகழ்காலம் - சொல்லிமுடிக்கும் முன் இறந்தகாலம்.
ஆக நிகழ்காலம் என்பதே இல்லாது போயின்
இறந்த காலத்தில் வாழ்ந்தென்ன ஆவது.

வருமுன்னே புதைந்து கனவாகி இல்லாது போகும்
நிகழ்காலத்துக்காகவே நமது முயற்சி அத்தனையும்.

இறைவழிபாடு

இருப்பதை மறைக்கும் புகையை
விளக்க வந்ததே
இறை நம்பிக்கையும்
மதங்களும்
மதச்சடங்குகளும்
ஆனால், இன்று அவைகளே
விளக்கி ஒதுக்க முடியாத
இரும்புத்திரைகளாக
பரிணமித்துபோயின படியால்
இருப்பதை மறைக்கும் புகையை
விளக்குவது என்பது எட்டாது போனது
அந்தோ பரிதாபமே.

பற்றறுக்கத்தான் கடவுள்.
கடவுள் பற்றும்
மதப்பற்றும்
இருக்கும் பற்றுகளை
இருகத்தான் செய்கின்றன.

இரும்புத்திரைகளாகிப்போன
இறைப்பற்று
மதப்பற்று
மதச்சடங்கில் பற்று
என்று அதிகப்படியாக நம்
முதுகில் ஏற்றுள்ள
பற்றுகளை அறுத்தாலன்றி
தெய்வத்தை மறைக்கும்
புகைவிலகா.

மென்மையான புகையைவிளக்க வந்தது
எஃகாகிப்போனது
அந்தோ பரிதாபம்.

நடுநிலை

இரட்டைகள் இருக்கும் வரை இறைவன் தெரியான்

நல்லது எனும் பொழுது கெட்டதும் இருக்கும்

நல்லதை நாம் இறைவனாக பார்க்கும் பொழுது

கெட்டதை யாராக பார்ப்பது

நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக பார்க்கும் பொழுதுதான்

ஒன்றான இறைவன் தெரிவான்

ஆலயம்

ஒருவனுக்கு பல வீடுகள், பல ஊர்களில் இருந்தாலும்
அங்கு யார் இருப்பது என்று கேட்டால்,
அந்த ஒருவனைத்தான் நாம் குறிப்போம்
அதே போல்,
எத்தனை கோவில்கள் இருந்தாலும்,
எத்தனை மசூதிகள், தேவாலயங்கள் இருந்தாலும்,
எத்தனை விதமான தெய்வங்கள் அந்த கோவில்களில், ஆலயங்களில் இருந்தாலும் இருப்பவன் ஒருவனே.

விதவிதமாய் கோவில்கள் பல சென்று வழிபட்டு என்ன பயன்...

முரண்பாடு

வாழும் ஆசையையும் வைத்து

மரண பயத்தையும் வைத்து

மரணத்தையும் வைத்த அந்த

விந்தைமிகு ஞாலத்துக்கு போற்றி

(இந்த முரண்பாட்டுக்கு பின்னால் ஒழிந்துள்ள கொடூரமே நமது துன்பங்களுக்கு ஆணிவேர், கொடூரத்தை ஆயுங்கால் காரணமானதிடம் வேண்ட ஒன்றும் இருக்காது)