Saturday, June 27, 2009

மதிப்பு - 1

நாம் ஒவ்வொருவரும் நமது அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் கிடைத்தவுடன், அடுத்து பெரிதாக கருதுவது அடுத்தவர்கள் நமக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையும் தான். மதிப்புக்கான அளவுகோல்களை நமது சமுதாயம் காலங்காலமாக நமக்கு வகுத்துக்கொடுத்துள்ளது. இன்றைய காலத்தில், ஒருவருடைய மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வெளிவிஷயங்களினால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவருடைய கல்வி, அவர் கல்விகற்ற நிறுவனங்கள், அவர் பெற்ற மதிப்பெண்கள், மெடல்கள், அவர் வேலை பார்க்கும் மற்றும் பார்த்த நிறுவனங்கள், அதில் அவரது வேலை, அவர் வாங்கும் சம்பளம், அவர் வைத்திருக்கும் வீடு மற்றும் இதர சொத்துக்கள், வைத்திருக்கும் வாகனத்தின் மாடல், அவருடைய மனைவியின் கல்வி, மற்றும் வேலை, அவர் அணிந்திருக்கும் நகைகள், குழந்தைகளின் கல்வி, அவர்கள் படிக்கும் நிறுவனங்கள், இவர்கள் எல்லோரும் அணிந்திருக்கும் உடைகள், செருப்புகள், கைக்கெடியாரங்கள், மொபைல், வீட்டில் இருக்கும் உபகரணங்களின் பிராண்ட், இன்னும் அதிகமாக போனால், வீட்டு வேலை ஆட்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை என்று இந்த வெளிவிஷயங்கள் நீண்டு கொண்டே போகும்.

இதற்கு மாறாக, நாம் அன்றாட வாழ்வில், மேலே கூறியவை எல்லாம் வைத்திருக்கும் பெரும்பாலானோர், ஒன்றுமே இல்லாமல் இருக்கும் சன்னியாசிகளை வணங்குவதையும் அவர்கள் கால் பணிந்துகிடப்பதையும் பார்த்து இருக்கிறோம்.

ஆக இந்த முரண்பாட்டில் இருந்து என்ன தெரிகிறது என்றால், உண்மையான மதிப்பு, ஒன்றுமே இல்லாத அந்த சன்னியாசிகளிடம் இருக்கிறது. ஆனால், அந்த மாதிரியான உண்மையான மதிப்பு இல்லாதவர்கள், மேலே கூறிய வெளி அலங்காரத்தினால் அது இருப்பது மாதிரி காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஆக உண்மையான மதிப்பு என்பது நமது உள்ளே உள்ளத்தில் இருக்கிறது. அந்த மதிப்பு தெரியாமல், நாம் இல்லாத வெளி விஷயங்களில் தேடி அல்லது வெளி விஷயங்களை சேர்த்துக்கொண்டு அந்த மதிப்பை அடைய விரும்புகிறோம்.

உள் மதிப்பைப்பற்றி யோசிக்கவும் அதற்கு மெனக்கடவும் நேரம் ஒதுக்காமல், வெளி மதிப்புக்குத்தான் நாம் நமது நேரத்தை செலவு செய்கிறோம். இறுதியில் எத்தனை தான் வெளிவிஷயங்கள் இருந்தாலும், உள் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும் பொழுது, நாம் எதற்காக இத்தனை பாடுபட்டோமோ மெனக்கெட்டோமோ அந்த மதிப்பையும் மரியாதையையும் பெறமுடியாமல் மீண்டும் மீண்டும் வெளி விஷயங்களை சேர்க்க முயன்று கொண்டே இருக்கிறோம். போக வேண்டிய ஊருக்கு எதிர்புறமாக பயணித்து, பயணத்தின் முடிவில் போக வேண்டிய ஊருக்கு வெகு தொலைவில் திரும்பி வரவே முடியாத தூரத்தில் நிற்கிறோம்.

அந்த உள் மதிப்புகள் தான் என்ன?

நமது உள்ளத்தே உள்ள மதிப்புகளைப்பற்றி எத்தனையோவிதமாக எத்தனையோ ஆன்மீக நூல்கள் கூறியிருக்கின்றன. ஆகவே இங்கே அவ்வளவையும் விவரித்துக்கூற வேண்டியதில்லை. இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, வெளி விஷயங்களில் மதிப்பு இல்லை, அப்படிப்பட்ட மதிப்புகள் போலியானவை நிரந்தரமற்றவை; அவைகள், நமக்கு மதிப்பை தேடித்தராது. அதற்காக நேரத்தையும் நமது மனதையும் செலவிடுவதைவிட சும்மா ஒன்றும் செய்யாமல் இருந்தால் கூட நமது மதிப்பு இப்பொழுது இருப்பதைவிட அதிகமாகும் என்பதைத்தான்.

இதனை ஒரு சிறு கதையின் மூலம் இன்னும் நன்றாக புரிந்து கொள்வோம்.

ஒருநாள் ஒரு நல்ல பெண்மணி, ஒரு மலைமேல் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு விலைமதிப்பற்ற ரத்தினத்தை ஒரு ஓடையின் அருகில் கண்டு எடுத்தார். மறுநாள் அந்த பெண்மணி பசியோடு மிகுந்த களைப்பில் இருந்த ஒரு வழிப்போக்கரை சந்திக்க நேர்ந்தது. அவருக்கு உணவு தருவதற்காக அந்த பெண்மணி தனது கைப்பையை திறந்த பொழுது அந்த வழிப்போக்கர் அந்த பைக்குள் இருந்த ரத்தினக்கல்லை பார்த்துவிட்டு அந்த பெண்மணியிடம் அந்த கல்லை எனக்கு தரமுடியுமா என்று கேட்டார். அந்த பெண்மணியும் மறு பேச்சு பேசாமல் எதைப்பற்றியும் யோசிக்காமல், எந்த தயக்கமும் இல்லாமல் அந்த கல்லை அவரிடம் உடனே கொடுத்துவிட்டார். தனக்கு பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் உட்சாகத்துடனும் அந்த வழிப்போக்கர் விடைபெற்று சென்றுவிட்டார். அவருடைய வாழ்நாளின் எல்லா தேவைகளையும் அந்த கல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர் தீர்த்துக்கொள்ளமுடியும் என்று அவருக்கு நன்றாக புரிந்திருந்ததே அவருடைய சந்தோஷத்துக்கு காரணம். ஆனால் சில நாட்கள் சென்ற பின்பு, அந்த பெண்மணியை தேடி கண்டுபிடித்து அந்த கல்லை திரும்ப கொடுத்தார்.

அந்த பெண்மணி திகைத்து “ஏன் இதை திருப்பிக்கொடுக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு.

“அம்மணி, இதை வாங்கும் பொழுது நன்றாக சந்தோஷத்தோடு தான் வாங்கிச்சென்றேன். ஆனால், பிற்பாடு யோசித்துப்பார்த்து தான் இதை திருப்பிக்கொடுக்கிறேன். எனக்கு நன்றாக தெரியும் இது விலைமதிக்க முடியாதது என்றும் இது எனக்கு எல்லா செல்வங்களையும் பெற்றுத்தரும் என்றும். ஆனால், இதை நீங்கள் வைத்துக்கொண்டு இதைவிட அதிக மதிப்புள்ள ஒன்றை எனக்கு தரவேண்டும். உங்களுக்கு உள்ளே உள்ள எது உங்களை இந்த விலைமதிப்பற்ற கல்லை எந்த யோசனையும் இல்லாமல் கொடுக்க வைத்ததோ அந்த நல்ல உள்ளத்தை எனக்கு தரவேண்டும்.” என்றார்.

No comments:

Post a Comment